தினமணி கட்டுரையிலிருந்து http://yosibbavan.blogspot.com/2008/08/blog-post_5550.html
நாட்டுக்கும் சமுதாயத்துக்கும் தேவையான “சமச்சீர் கல்வி’யை நடைமுறைப்படுத்தாமல் தமிழ்நாடு கல்வித்துறை புதிய குழப்பத்தைப் புகுத்திக் கொண்டுள்ளது. அனைவருக்கும் கல்வித்திட்டத்தின் கீழ் “செயல்வழிக் கற்றல்’ (அஆக) என்பதே அது. கூறுபட்டும், வேறுபட்டும் கிடக்கிற கல்வி முறைகளை ஒருமுகப்படுத்த வேண்டிய நேரத்தில் எதிர்பாராமல் இன்னொரு புதிய முறையைப் புகுத்துவது கல்வித்துறையில் மேலும் ஒரு குழப்பத்தை ஏற்படுத்தாதா?
ஒன்று முதல் ஐந்து வகுப்பு வரை புத்தகம் இல்லை; தேர்வு இல்லை; எழுத்துப்பயிற்சி இல்லை; வகுப்பு மாற்றம் இல்லை; அட்டைகளை வைத்துக் கொண்டு பாடம் நடத்தப்படுகிறது. அனைத்து வகுப்பு மாணவர்களும் ஒரே வகுப்பறையில் மாற்றமில்லாமல் அமர்ந்து படிப்பது மாணவர் இடையே மனச்சோர்வை ஏற்படுத்தாதா? அரசு பாடநூல் நிறுவனம் வெளியிடும் பாடநூல்களை என்ன செய்வது?
பாடப் புத்தகங்களைக் கொண்டு பாடம் நடத்துகிற நடைமுறையை இத்திட்டத்தின் மூலம் கைவிட்டதால் படிக்கும் திறன், எழுத்துப்பயிற்சி, நூலறிவு, மனப்பாடப் பயிற்சி மாணவர் மத்தியில் இல்லாமல் போய்விட்டது. சென்னை மாநகராட்சியில் மட்டுமே இருந்து வந்த இந்தத் திட்டம், இப்போது தமிழகம் எங்கும் அரசுப் பள்ளிகளிலும், அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் கட்டாயப்படுத்தப்பட்டு வருகிறது.
இதனால் இப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை மிகவும் குறைந்து வருகிறது. இருக்கும் மாணவர்களையும் பெற்றோர்கள் மாற்றுச் சான்றிதழ் வாங்கி, இந்தத் திட்டத்தை அமல்படுத்தாத மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் சேர்த்து வருகின்றனர். இதனால் ஏழை எளிய மாணவர்களுக்குப் புகலிடமாக இருந்துவரும் அரசு மற்றும் ஒன்றியப் பள்ளிகள் மூடப்படும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.
இப்படியொரு பாடமுறையைக் கொண்டுவர வேண்டும் என்று எந்தக் கல்விக்குழு பரிந்துரை செய்தது? இது நடைமுறைப்படுத்தப்பட்டு ஓராண்டு முடிவடைந்து விட்டது. இந்த ஓராண்டின் முடிவில் இதன் நிறைகுறைகளை ஆய்வு செய்து இரண்டாம் ஆண்டு தொடங்கியிருக்க வேண்டும். குறைபாடுகளைக் களையாமல் இந்த ஆண்டு ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கும் இத்திட்டத்தை விரிவுபடுத்தும் பணியைக் கல்வித்துறை செய்து வருகிறது.
இதனால் மாணவர்களின் எதிர்காலம் பாழாகிறது எனப் பெற்றோர்கள் கவலைப்படுகின்றனர். மாணவர் சேர்க்கை மிகவும் பாதிக்கப்படுகிறது என்று ஆசிரியர்கள் கவலைப்படுகின்றனர். சமச்சீர் கல்விக்கு இது தடையாக இருப்பதாகக் கல்வியாளர்கள் கவலைப்படுகின்றனர். இதனைத் தமிழகக் கல்வித்துறை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று ஆசிரியர் இயக்கங்கள் கேட்டுக் கொண்டுள்ளன.
தினமணி கட்டுரைகளின் தரம் குறித்து அறிய மேலும் ஒரு உதாரணம் http://payanangal.blogspot.com/2008/07/blog-post_29.html