நீதானே என் பொன்வசந்தம் பாடல்கள் கேட்டேன்.
இற்றை: படம் பார்த்த பிறகு பாடல்கள் குறித்த கருத்து மாறியுள்ளது. தெலுங்கு, தமிழ் இரு மொழிகளிலும் விடாமல் 3 வாரங்களாகத் தொடர்ந்து பாடல்களைக் கேட்டுக் கொண்டிருக்கிறேன். பாடல் வரிகளும், பாடல்களும் படத்துக்குப் பொருத்தமாக உள்ளன. படம் பார்ப்பதற்கு முன்பு பிடித்திருந்த கும்கி பாடல்கள், படம் பார்த்த பிறகு கேட்கவே தோன்றவில்லை !
கல்லூரி நாட்களில் (2000கள்) காசு கொடுத்து ஒலிநாடாக்கள் வாங்கியதற்குப் பிறகு, முதல் முறை இணையத்தில் பாடலை வாங்க வைத்தது கவுதம் மேனனின் சந்தைப்படுத்தல் வெற்றி. அதற்குப் பிறகும் இன்னும் பல பாடல்களை வாங்கத் தூண்டி இருப்பது, http://www.flipkart.com/mp3-downloads தள வடிவமைப்பின் வெற்றி. அண்மைக் காலத்தில் உடனுக்குடன் mp3 பாடல்கள் தரவிறக்கக் கிடைப்பது இல்லை. கிடைத்தாலும் தரம் குறைவாகவும், பாடல் அரை குறையாகவும் இருக்கிறது. mp3யின் அதிகபட்ச தரம் 320 kbps என்பதே தெரியாமல் கிடைத்த பாட்டை எல்லாம் கேட்டுக் கொண்டிருந்திருக்கிறேன் !
படத்தின் முன்னோட்டம் கிளப்பிய ஆவலில் சாய்ந்து சாய்ந்து, என்னோடு வா வா பாடல்களை முதலில் வாங்கினேன். பிறகு இணையத்தில் கேட்டுப் பார்த்து சற்று முன்பு, முதல் முறை பாடல்களை வாங்கினேன். வானம் மெல்ல பாட்டை இளையராசா பாடி இருக்காவிட்டால் வாங்கி இருப்பேன்.
http://baradwajrangan.wordpress.com/2012/09/05/bitty-ruminations-69/ பக்கத்தில் உள்ள பண்டிதர்கள் அளவுக்கு நமக்கு இசையின் நுணுக்கம் தெரியாது என்றாலும், ஒரு ரசிகனாகப் பார்க்கையில் ஆச்சரியமும் இல்லை. ஏமாற்றமும் இல்லை. வழமையான இளையராசா பாடல்கள் போல் அல்லாமல் சற்று முன்பும் முதல் முறையும் கேட்க கேட்க ஈர்க்கிறது. பாடல்களின் தொடக்கம், இடையில் வரும் இசை நன்றாக இருக்கிறது.
காட்சிகளை ஒதுக்கி விட்டுப் பார்த்தால் கவுதம் மேனனின் முந்தைய படப் பாடல்கள் அளவுக்கு இல்லை.இளையராசா இசை அது இது என்பதை எல்லாம் ஒதுக்கி விட்டுப் பார்த்தால் மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டுவதாக இல்லை என்பதே உண்மை. ஏதோ ஒரு வகையில் இன்றைய கால கட்ட இசையில் இருந்து விலகியும் பல இடங்களில் பழகிய இசையை ஒத்தும் இருக்கிறது. எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் வந்த கும்கி பாடல்கள் இதை விட அருமையாக ஈர்க்கின்றன.
பாடல் வரிகள் தான் மிகப் பெரிய ஏமாற்றம். ஏனோ இட்டுக்கட்டி எழுதியது போல இருக்கிறது. நா. முத்துக்குமார் கண்டிப்பாக அருமையாக எழுத வல்லவர். இளையராசா என்பதால் பம்மி விட்டார்களா? கவுதம் மேனன் கூட்டணியில் அருமையாக எழுதும் தாமரை ஏன் எழுதவில்லை?
எது எப்படியோ சமந்தாவுக்காக இரு மொழிகளிலும் படம் பார்க்கப் போவது நிச்சயம்
venkat 5:59 am on November 11, 2012 Permalink |
You need to listen all the songs at least 30 times then only you can realize the stuff what is in for the people who have normal music listening taste. You can do a PHD and doctorate in each song.