மாண்புமிகு சட்டமன்றப் பேரவை உறுப்பினர்களே,
வணக்கம்.
2010 ஆம் ஆண்டில், இந்தப் பதின்மூன்றாவது சட்டமன்றப் பேரவையின் பன்னிரெண்டாவது கூட்டத் தொடரில் உரையாற்றுவதில் நான் பெருமகிழ்ச்சியடைகிறேன். தமிழர் திருநாளாம் பொங்கல் மற்றும் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்களை அனைவருக்கும் தெரிவித்துக்கொள்கிறேன்.
2. ஐந்தாவது முறையாக தமிழக மக்கள் கலைஞர் கருணாநிதி அவர்களை முதலமைச்சராக ஆட்சிப் பீடத்தில் அமர்த்தியதைத் தொடர்ந்து * அவர் அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றியதோடு மட்டுமல்லாது; மேலும் பல நலத் திட்டங்களை வடித்தெடுத்து * தமிழக மக்களின் வாழ்வில் நலம் சிறக்கவும், வளம் கொழிக்கவும் ஓய்வின்றிச் செயலாற்றிவருகிறார். அவரது தலைமையிலான இந்த அரசின் சாதனைகளை வியந்து போற்றி, கடந்த நாடாளுமன்றத் தேர்தலிலும், அனைத்து இடைத் தேர்தல்களிலும் மகத்தான வெற்றிகளைத் தமிழக மக்கள் பரிசாக வழங்கிவருவதை இந்த நாடே நன்கறியும். இந்த வெற்றிகளை மக்களின் நற்சான்றுகளாக மனதில் பதித்து, பேரறிஞர் அண்ணா அவர்கள் காட்டிய வழியில் Ôமக்கள் தொண்டே மகேசன் தொண்டு’ என்ற உறுதியுடன் இந்த அரசு தனது பயணத்தைத் தொடரும்.
3. திராவிட இயக்கத்தின் முக்கியக் கொள்கைகளில் ஒன்றான சமூக நீதியை, அனைத்துச் செயல்பாடுகளிலும் முன்னிறுத்தி வெற்றி கண்டுவரும் இந்த அரசு; அதே வேளையில், மாநில சுயாட்சியின் அடிப்படையிலான உண்மையான கூட்டாட்சி இன்னும் எய்தப்படாமலேயே உள்ளது என்பதை நினைவூட்டி, அந்த இலக்கை எய்திட உறுதி பூண்டுள்ளது. விடுதலை அடைந்த ஒரு நாட்டின் தேவைகளின் அடிப்படையில் அறுபது ஆண்டுகளுக்கு முன்பு வகுக்கப்பட்ட மத்திய மாநில அரசுகளிடையேயான அதிகாரப் பகிர்வினை, ஜனநாயகம் வேரூன்றி தழைத்தோங்கி வலிவும் பொலிவும் பெற்று விளங்கும் இன்றைய சூழலுக்கேற்ப
மறு ஆய்வு செய்ய வேண்டிய தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை வலியுறுத்தியே, முதலமைச்சர் கலைஞர் அவர்கள் 1974ஆம் ஆண்டில் இந்த அவையில் மாநில சுயாட்சித் தீர்மானத்தை முன்மொழிந்து நிறைவேற்றித் தந்தார்கள். மக்களுக்கு அருகேயிருந்து அவர்களுக்குத் தேவையான திட்டங்களைச் செம்மையாகச் செயல்படுத்திவரும் மாநில அரசுகளின் கரங்களை வலுப்படுத்த மத்திய அரசு முன்வர வேண்டும்.
4. தமிழ்நாடு போன்ற சிறப்பாகச் செயல்படும் மாநிலங்களுக்கு அளிக்கப்படும் நிதிப்பங்கீடு (devolution) அடுத்தடுத்த மத்திய நிதிக் குழுக்களால் தொடர்ந்து குறைக்கப்பட்டுள்ளது. இந்தப் பாரபட்சநிலை பதின்மூன்றாவது நிதிக் குழுவிலும் தொடராமல் நியாயமான நிதிப்பங்கீடு அளிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.
5. நமது நாட்டை வேகமாக வளர்ச்சியடையச் செய்ய மைய அரசு மேற்கொண்டுவரும் பல்வேறு பொருளாதாரச் சீர்திருத்த நடவடிக்கைகளுக்குத் தோள்கொடுக்கும் அதே வேளையில் * விவசாயிகள், தொழிலாளர்கள், மீனவர்கள் போன்று சமுதாயத்தின் அடித்தளத்தில் வாழும் சாமானிய மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகள் தொடர்பான கொள்கைகள், தேசிய அளவிலான முடிவுகள் மற்றும் புதிய சட்ட வரைவுகள் குறித்து மாநில அரசுகளைக் கலந்தாலோசித்த பின்னரே மைய அரசு உரிய முடிவுகளை எடுப்பதுதான் கூட்டாட்சித் தத்துவத்திற்கு உயிர் கொடுப்பதாகும்.
6. தற்போது நடைமுறையில் உள்ள மத்திய மாநில மறைமுக வரிவிதிப்பு முறைகளுக்கு மாற்றாகக் கொண்டுவரப்பட உள்ள பொருள்கள் மற்றும் நற்பணி வரி (Goods and Services Tax) மாநில அரசுகளின் ஒருமித்த கருத்தின் அடிப்படையிலும், மாநிலங்களின் அதிகாரங்களும் வருவாயும் பாதிக்கப்படாத வகையிலும் அமைய வேண்டும் என்பதே இந்த அரசின் கருத்தாகும்.
7. தீவிரவாதம் எவ்வகைப்பட்டதாயினும் அதனை வேரறுக்க இந்த அரசு உறுதி பூண்டுள்ளது. அண்டை மாநிலங்களிலிருந்தும், நமது கடற்கரைப் பகுதிகள் மூலமாகவும் தமிழகத்தில் தீவிரவாதம் ஒரு சிறிதும் ஊடுருவாதிருக்க; இந்த அரசு தொடர்ந்து விழிப்போடு கண்காணித்து வருகிறது. இந்த அரசின் கோரிக்கையை ஏற்று சென்னையில் தேசிய பாதுகாப்புப் படை மையத்தை அமைத்துத் தந்துள்ள மத்திய அரசுக்கு இந்த அரசு நன்றி தெரிவித்துக் கொள்கிறது. மக்களைக் காக்கும் மகத்தான பணியில் ஈடுபட்டுள்ள காவல்துறையினரை மேலும் ஊக்குவிக்கும் வகையில், அவர்தம் நலம்பேண 2006 ஆம் ஆண்டில் இந்த அரசால் அமைக்கப்பட்ட மூன்றாவது காவல் ஆணையம் அளித்த பரிந்துரைகளை இந்த அரசு ஏற்றுச் செயல்படுத்தியுள்ளது. மாறிவரும் காலச் சூழலின் அடிப்படையிலான புதிய பிரச்சினைகளை எதிர்கொள்ளும் வகையில், நமது காவல்துறையை மேலும் நவீனப்படுத்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறோம்.
8. வேளாண் தொழிலையும், உழவர் பெருமக்களையும் ஊக்குவிக்கும் வகையில், கூட்டுறவுக் கடன்களைத் தள்ளுபடி செய்ததும்; நமது நாட்டிலேயே முதல் முறையாக வட்டியின்றி கூட்டுறவுப் பயிர்க் கடன்களை வழங்கியதும் இந்த அரசேயாகும். மேலும், இந்த நிதியாண்டிலும் ரூபாய் 2,000 கோடி கூட்டுறவுப் பயிர்க் கடன் வழங்க திட்டமிடப்பட்டு இதுவரை ரூபாய் 1,559 கோடி வழங்கப்பட்டுள்ளது.
9. நெல்லுக்கான கொள்முதல் விலை
2005-2006ல் ரூபாய் 600 என்றிருந்ததை, கடந்த மூன்றாண்டுகளிலேயே ரூபாய் 1,050 ஆகவும், கரும்புக்கான கொள்முதல் விலை ரூபாய் 1,014 என்றிருந்ததை போக்குவரத்துக் கட்டணம் மற்றும் சர்க்கரை கட்டுமான ஊக்கத் தொகையுடன் சேர்த்து ரூபாய் 1,550 ஆகவும் இந்த அரசு உயர்த்தி வழங்கியுள்ளது. இந்த ஆண்டு விவசாயிகள் மேலும் அதிக நெல்லை உற்பத்தி செய்ய ஊக்குவிக்கும் நோக்குடன் தற்போது சாதாரண ரக நெல்லுக்கு குவிண்டால் ஒன்றுக்கு ரூபாய் 1,000 மற்றும் சன்னரக நெல்லுக்கு குவிண்டால் ஒன்றுக்கு ரூபாய் 1,050 என்று வழங்கப்படுகிற விலையுடன்; மேலும் கூடுதலாக குவிண்டாலுக்கு ரூபாய் 50 ஊக்கத் தொகை மாநில அரசின் சார்பாக வழங்க அரசு முடிவு செய்துள்ளது. எனவே, சாதாரண நெல்லுக்கான கொள்முதல் விலை குவிண்டால் ஒன்றுக்கு ரூபாய் 1,050 ஆகவும் சன்னரக நெல்லுக்கான கொள்முதல் விலை குவிண்டால் ஒன்றுக்கு ரூபாய் 1,100 ஆகவும் உயரும். இதனால் அரசுக்கு ஏற்படும் கூடுதல் செலவு ரூபாய் 80 கோடியாகும்.
10. காய்கறி போன்ற விளைபொருள்களுக்கு உரிய விலை கிடைக்கச்
செய்வதோடு; நுகர்வோருக்கும் பேருதவியாக இருந்த உழவர் சந்தைகள் மீண்டும் திறக்கப்பட்டு, கடந்த மூன்றரை ஆண்டு காலத்தில் 45 புதிய உழவர் சந்தைகளும் அமைக்கப்பட்டுச் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றன. மேலும், புதிய உழவர் சந்தைகள் இந்த ஆண்டில் தொடங்கப்படும்.
11. தமிழகத்தில் செம்மை நெல் சாகுபடி முறையினால், நெல் உற்பத்தித்திறன் கணிசமாக உயர்ந்து நீர்ப் பயன்பாடும் வெகுவாகக் குறைந்துள்ளது. அண்மையில் உலகவங்கியின் தலைவர்
திரு. இராபர்ட் சாலிக் அவர்கள் தமிழகத்தில் இப்புதிய முறை வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டுவருவது குறித்து தனது பாராட்டினைத் தெரிவித்துள்ளார். மேலும், அனைத்து மாவட்டங்களுக்கும் துல்லியப்பண்ணை முறையை விரிவுபடுத்தி, அதிக வருவாய் ஈட்டவல்ல பயிர்களைக் குறைந்த நீர் பயன்பாட்டிலேயே பயிர் செய்ய விவசாயிகளை இந்த அரசு ஊக்குவித்து வருகிறது. விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த அனைத்துத் துறைகளையும் ஒருங்கிணைத்து உலக வங்கியின் உதவியோடு ரூபாய் 2,547 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டுவரும் நீர்வள நிலவளத் திட்டத்தின் கீழ் 63 வடிநிலப்பகுதிகளில் 16 இலட்சம் ஏக்கர் விவசாய நிலங்களுக்குப் பயன் தரக்கூடிய பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
12. நிலமற்ற ஏழை எளியோருக்கு இலவசமாக நிலம் வழங்கும் திட்டத்தின் கீழ் இதுவரை 1,77,057 ஏழை விவசாயக் குடும்பங்களுக்கு 2,11,356 ஏக்கர் நிலம் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது. விவசாயத் தொழிலாளர்கள் நல வாரியத்தின் மூலமாக 4,65,386 ஏழை விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களுக்கு ரூபாய் 371 கோடி மதிப்பிலான நல உதவிகள் இதுவரை வழங்கப்பட்டுள்ளன.
13. இயற்கைச் சீற்றங்களால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கும் தேசிய பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தை முனைப்போடு செயல்படுத்தி, 2001-2006 ஆம் ஆண்டு காலத்தில் 2,38,036 விவசாயிகளுக்கு ரூபாய் 145 கோடி வழங்கப்பட்ட நிலைக்கு மாறாக, கடந்த மூன்றரை ஆண்டுகளில் 8,59,704 விவசாயிகளுக்கு ரூபாய் 680 கோடி இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளது. Ôநிஷா’ புயல் காரணமாக விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட வேண்டிய ரூபாய் 652 கோடி இழப்பீட்டுத் தொகையில் மாநில அரசு தனது பங்கான ரூபாய் 306 கோடியை முழுமையாக அளித்த பிறகும்கூட, மைய அரசு தனது பங்கில் ரூபாய் 46 கோடியை மட்டுமே அளித்துள்ளதால் மீதித் தொகையான ரூபாய் 260 கோடியை உடனடியாக வழங்க வலியுறுத்தியுள்ளோம்.
14. கடந்த நவம்பர் மாதம் பெய்த பெருமழையின் காரணமாக நீலகிரி மாவட்டம் மிகுந்த பாதிப்புக்குள்ளானது. நிலச்சரிவினால் வீடுகள் சேதமடைந்து உயிர் இழப்பும் ஏற்பட்டது. அத்துடன் இம்மாவட்டத்தின் முக்கியச் சாலைகளும் சேதமடைந்தன. உடனடி நிவாரணப் பணிகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டன. முற்றிலும் சேதமடைந்த வீடுகளுக்கு 15 நாட்களிலேயே தற்காலிகக் குடியிருப்புகள் கட்டிக் கொடுக்கப்பட்டு மற்றும் சீரமைப்புப் பணிகளுக்காக மேலும் ரூபாய் 25 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருவதை அந்த மாவட்ட மக்கள் மகிழ்ச்சிடன் வரவேற்றுள்ளனர்.
15. மாநிலங்களுக்கு இடையே நிலவும் நதி நீர்ப் பிரச்சினைகளைப் பேச்சுவார்த்தை மூலமாகவும் சட்டரீதியாகவும் தீர்க்க அனைத்து முயற்சிகளையும் தமிழக அரசு அயராது மேற்கொண்டுவரும் வேளையில், நமது விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கக் கூடிய வகையில் சில அண்டை மாநிலங்கள் நமது நியாயமான பங்கினைக் கூடத் தர முன்வராத சூழ்நிலையை நாம் காண்கிறோம். முல்லைப் பெரியாறு பிரச்சினையில் தென்மாவட்ட விவசாயிகளின் நலனைக் காக்கவும், தமிழகத்தின் உரிமையை முழுமையாக நிலைநாட்டவும் இந்த அரசு அனைத்துச் சட்டபூர்வமான நடவடிக்கைகளையும் உறுதியுடன் தொடர்ந்து மேற்கொள்ளும். இந்த ஆற்றின் குறுக்கே தற்போதுள்ள அணையின் உயரளவு நீர் மட்டத்தை உச்சநீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் உயர்த்திக்கொள்ளவும், தேவையற்ற இன்னொரு அணை அமைப்பதற்கான கேரள அரசின் முயற்சிகளைத் தடுத்திடவும் ஆவன செய்யுமாறு மத்திய அரசைத் தொடர்ந்து வலியுறுத்துகிறோம்.
16. நீர் வளம் குறைந்த மாநிலங்களுக்கு மிகப் பயன் உள்ளதாகக் கருதப்படுவதும், தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருவதுமான நதி நீர் இணைப்புத் திட்டத்தைச் செயல்படுத்த இயலாது என்று மத்திய அரசு இப்போது கருதினாலும்; இந்த அரசைப் பொறுத்தவரையில், மாநிலங்களுக்குள் பாயும் ஆறுகளையாவது இணைத்து, வெள்ள உபரி நீரை வறண்ட மாவட்டங்களுக்குக் கிடைக்கச் செய்யும் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டுமென்று முடிவு எடுத்து, 2008 ஆம் ஆண்டு ஆளுநர் உரையில் அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து Ôகாவிரி குண்டாறு இணைப்புத் திட்டம்’ முதற் கட்டமாக ரூபாய் 189 கோடி மதிப்பீட்டிலும், தாமிரபரணி ஆற்றின் உபரி நீரை தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் வறண்ட பகுதிகளுக்குக் கொண்டு செல்வதற்கான Ôதாமிரபரணி கருமேனியாறு நம்பியாறு இணைப்புத் திட்டம்’ ரூபாய் 369 கோடி மதிப்பீட்டிலும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இத்தகைய திட்டங்களுக்கு விரைவுபடுத்தப்பட்ட பாசன உதவித் திட்டத்தின் கீழ் நிதியுதவி வழங்கப்பட வேண்டுமென்று 19.12.2007 அன்று நடைபெற்ற தேசிய வளர்ச்சிக் குழுக் கூட்டத்தில் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் விடுத்த வேண்டுகோளுக்கு அக்குழு இசைவு அளித்துள்ளதன் அடிப்படையில் இத்திட்டங்களுக்கு மைய அரசு நிதியுதவி வழங்க வேண்டுமென்று வலியுறுத்துகிறோம்.
17. தமிழர்களின் நீண்டகாலக் கனவானதும், அறிஞர்களும் சான்றோர்களும் பெரிதும் விரும்பியதும், மாண்புமிகு பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங், ஐக்கிய முற்போக்குக் கூட்டணித் தலைவர் திருமதி சோனியா காந்தி, மாண்புமிகு முதலமைச்சர் கலைஞர் மற்றும் அனைத்துக் கட்சித் தலைவர்களும் ஒரே மேடையில் ஒருங்கே இருந்து அடிக்கல் நாட்டியதுமான சேது சமுத்திரத் திட்டத்தைச் செயல்படுத்துவதில் ஏற்பட்டுள்ள கால தாமதம் தமிழக மக்களுக்குக் கவலை அளிப்பதாக உள்ளது. தமிழகத்தை வளமும், பொருளாதார வலிவும் பெறச் செய்யக்கூடிய இத்திட்டத்தைச் செயல்படுத்துவதில் எழுந்துள்ள சிக்கல்களைக் களைந்து, இத்திட்டத்தை விரைந்து நிறைவேற்றிட வேண்டுமென்று மத்திய அரசினை இந்த அரசு வலியுறுத்துகிறது.
18. நமது நாட்டில் கடந்த நவம்பர் இறுதி வாரத்தில் ஒட்டுமொத்த பண வீக்கம் 4.78 சதவீதமாக மட்டுமே இருந்த போதிலும், சென்ற 11 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உணவுப் பொருள்களின் விலை ஏற்றத்தினால் ஏற்பட்டுள்ள பண வீக்கம் 19.05 சதவீதமாக உயர்ந்துள்ளது. நாட்டின் பல பகுதிகளில் இந்த ஆண்டு ஏற்பட்ட வறட்சியினால், சர்க்கரை, பருப்பு வகைகள், சமையல் எண்ணை போன்ற பொருள்களின் மொத்த உற்பத்தி குறைந்து, அவற்றின் விலை உயர்ந்துள்ளதுதான் இதற்குக் காரணம். சாதாரண சாமானிய மக்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் விலைவாசி உயர்வின் சுமையினால் பாதிக்கப்படாமல் பார்த்துக்கொள்ளும் வகையில், இந்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்துள்ளது. குறிப்பாக, தமிழக அரசுதான் நமது நாட்டிலேயே மிகக் குறைந்த விலையில் ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி வழங்கி வருகிறது. அது மட்டுமன்றி, அத்தியாவசிய உணவுப் பொருள்களாகிய துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, பாமாயில் மற்றும் கோதுமை மாவு போன்றவற்றை அரசே கொள்முதல் செய்து குறைந்த விலையில் நியாயவிலைக் கடைகள் மூலம் வழங்கி வருவதோடு, Ôமலிவு விலையில் மளிகைப் பொருள்’ திட்டத்தின் கீழ் ரூபாய் 50க்கு 10 மளிகைப் பொருள்கள், அனைத்துக் குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்கப்பட்டு வருகின்றன. அத்தியாவசியப் பொருள்களின் விலைவாசி உயர்விலிருந்து மக்களைப் பாதுகாக்க இந்த அரசு எடுத்துவரும் இந்த முன்னோடி நடவடிக்கைகள், ஏழை எளியோருக்கும் நடுத்தர வர்க்கத்தினருக்கும் ஆறுதல் தருவதாக அமைந்துள்ளன.
19. இவ்வாறு தமிழகத்தில் உணவு மற்றும் மளிகைப் பொருள்கள் மானிய விலையில் கிடைப்பதை உறுதி செய்ய, இந்த அரசு மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகளின் விளைவாக அரசின் உணவு மானியச் செலவு 2005-2006 இல் ரூபாய் 1,200 கோடியாக இருந்தது 2009-2010 இல் ரூபாய் 4,000 கோடியாக உயர்ந்துள்ளது.
20. ஏழை எளிய சாமானிய மக்கள் அன்றாடம் அணுகும் அரசு மருத்துவமனைகளின் கட்டமைப்பை மேம்படுத்தவும், அங்கு காலியாக இருந்த மருத்துவர் மற்றும் செவிலியர் பணியிடங்களை நிரப்பி, தரமான மருத்துவச் சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்யவும் இந்த அரசு கடந்த மூன்றரை ஆண்டுகளாகப் பல்வேறு திட்டங்களை வகுத்து செயல்படுத்தி வந்துள்ளது. இவற்றின் கீழ், இந்த அரசு ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து ரூபாய் 792 கோடி மருத்துவத் துறை கட்டமைப்பு மேம்பாட்டிற்குச் செலவிட்டிருப்பதோடு, 6,009 மருத்துவர், 7,042 செவிலியர் மற்றும் 2,812 மருத்துவமனைப் பணியாளர்கள் புதிதாக அரசு மருத்துவமனைகளில் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
21. உயர் சிகிச்சை வசதிகள் மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் கிடைத்திட மேலும் 5 புதிய அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் தொடங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் முதல் மருத்துவக் கல்லு£ரியும் பாரம்பரியமிக்கதுமான சென்னை மருத்துவக் கல்லு£ரிக்கு நவீனக் கட்டடங்கள் மற்றும் கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய ஒரு புதிய கட்டட வளாகம், சென்னை பொது மருத்துவமனைக்கு அருகில் உள்ள பழைய சிறைச் சாலை இருந்த இடத்தில் ரூபாய் 70 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
22. Ôவருமுன் காப்போம்’ திட்டத்தின் கீழ் மாநிலமெங்கும் இதுவரை 13,045 முகாம்கள் நடத்தப்பட்டு 1,26,73,884 பேர் பயனடைந்துள்ளனர். மாநிலமெங்கும் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள
Ô108’ இலவச அவசரகால மருத்துவ ஊர்திச் சேவை வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அரசின் மக்கள் நலம் பேணும் இத்தகைய முன்னோடி முயற்சிகளின் பலனாக, அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கையும் மகப்பேறுகளின் எண்ணிக்கையும் குறிப்பிடத்தக்க அளவிற்கு உயர்ந்துள்ளன.
23. அரசு மருத்துவமனைகள் இவ்வாறு திறம்படச் செயல்பட்டு, பொதுமக்கள் பயனடைந்துவரும் நிலையிலும், உயிருக்கு ஆபத்தான பல கடும் நோய்களுக்கு ஏழை எளியோர் தனியார் மருத்துவமனைகளில் உயர் சிகிச்சை பெறவேண்டிய நிலை இருப்பதையும், அதற்கான செலவுகளை அவர்களால் மேற்கொள்ள இயலாது என்பதையும் உணர்ந்து மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், Ôஉயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான கலைஞர் காப்பீட்டுத் திட்டம்’ என்ற உன்னதத் திட்டத்தை அறிவித்துச் செயல்படுத்திவருகிறார்கள். இத்திட்டத்திற்கான காப்பீட்டுத் தொகையை அரசே ஏற்றுச் செலுத்தியுள்ளது. மக்களிடையே மகத்தான வரவேற்பைப் பெற்றுள்ள இத்திட்டத்தின் கீழ் இதுவரை 1,40,70,367 குடும்பங்கள் உறுப்பினர்களாகச் சேர்ந்துள்ளன. இத்திட்டத்தின் கீழ் முதல் நான்கு மாதங்களிலேயே இதுவரை 24,495 பயனாளிகளுக்கு ரூபாய் 83 கோடி செலவில் மாநிலமெங்கும் உள்ள
539 மருத்துவமனைகளில் இலவச உயர் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
24. தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் சிறப்பாக நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் செயல்வழிக் கல்விமுறை நமது நாட்டிற்கே முன்னோடியாக விளங்கி வருகிறது. நாட்டின் பிற மாநிலங்களிலிருந்தும் பல வெளிநாடுகளிலிருந்தும் பல வல்லுநர்கள் இம்முறையைப் பார்வையிட்டுத் தத்தம் பகுதிகளிலும் இதனை நடைமுறைப்படுத்த முனைந்துள்ளனர். மாநிலத்தில் அனைத்துக் குழந்தைகளுக்கும் ஐந்து வருட ஆரம்பக் கல்வி கிடைக்கச் செய்யும் இலக்கை வெற்றிகரமாக எய்தியுள்ள இந்த அரசு, மத்திய அரசு அறிவித்துள்ள தேசிய இடைநிலைக் கல்வி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், உயர்நிலைப் பள்ளிகளை மேம்படுத்தி அனைவருக்கும் இடைநிலைக் கல்வி கிடைக்க ஆவன செய்யும்.
25. கல்வி தரமானதாகவும் சீரானதாகவும் அமைந்திட இந்த அரசு, சமச்சீர் கல்வித் திட்டத்தை வகுத்து செயல்படுத்திட முனைந்துள்ளது. நமது மாநிலத்திலும் பிற மாநிலங்களிலும் நடைமுறையில் இருக்கும் பல்வேறு பாடத்திட்டங்கள் பற்றி ஆய்ந்து, அத்திட்டங்களின் நல்ல அம்சங்களைக் கண்டறிந்து, அவற்றைத் தொகுத்து, புதிய தரமான எளிதான பொதுப் பாடத்திட்டம் ஒன்றினை வகுத்து மாநிலமெங்கும் நடைமுறைப்படுத்த முடிவு செய்துள்ளது. பல்வேறு பாட வாரியங்கள் மற்றும் பாடத்திட்டங்களால் மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் இன்னல்கள் இருப்பின் அவற்றைக் களையவும், தேசிய அளவில் நடைபெறும் தேர்வுகளில் நமது மாநில மாணவர்களின் போட்டியிடும் திறனை மேம்படுத்தவும், இந்த சமச்சீர் கல்வித் திட்டம் உதவும் என இந்த அரசு உறுதியாக நம்புகிறது. இந்தப் புரட்சிகரமான திட்டம் வெற்றிபெற அனைத்துத் தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
26. இந்த அரசின் கோரிக்கையை ஏற்று திருச்சியில் இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனம், கோயம்புத்தூரில் உலகத் தரம்வாய்ந்த பல்கலைக் கழகம் ஆகியவற்றை அமைத்திடவும், திருவாரூரில் மத்தியப் பல்கலைக் கழகத்தைத் தொடங்கிடவும் ஒப்புதல் அளித்த மத்திய அரசுக்கு இந்த அரசு தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.
27. அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகளிலும், மருத்துவக் கல்லூரிகளிலும், பல் மருத்துவக் கல்லூரிகளிலும், வேளாண்மைக் கல்லூரிகளிலும், கால்நடை மருத்துவக் கல்லூரிகளிலும், சட்டக் கல்லூரிகளிலும் ஒற்றைச் சாளர முறையில் சேர்க்கை பெறும் மாணவர்களில் – அவர்கள் குடும்பத்தில் இதுவரை யாரும் பட்டதாரிகளே இல்லையானால்; அந்த மாணவர்கள் தொழிற்கல்வி படிப்பதை ஊக்குவிப்பதற்காக, சாதிப்பாகுபாடின்றியும் வருமானத்தைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாமலும் வரும் கல்வியாண்டு முதல் அவர்கள் செலுத்த வேண்டிய கல்விக் கட்டணம் முழுவதையும் அரசே ஏற்றுக்கொள்ளும்.
28. தற்கால உலக நிகழ்வுகளையும் அறிவியல் கருத்துக்களையும் அனைவரும் தெரிந்துகொள்ளும் வாய்ப்பாகவும், பொழுதுபோக்குச் சாதனமாகவும் விளங்கக்கூடிய தொலைக்காட்சிச் சேவையை ஏழை எளிய மக்கள் பெறும் வகையில், இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் வழங்கும் திட்டத்தின் முதல் நான்கு கட்டங்களில் 1,12,80,000 வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் கொள்முதல் செய்யப்பட்டு இதுவரை 96,09,220 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. இத்திட்டத்தின் ஐந்தாவது கட்டத்தின் கீழ் மேலும் 40 இலட்சம் வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் கொள்முதல் செய்யப்பட்டு தொடர்ந்து இந்த ஆண்டும் வழங்கப்படும்.
29. தொழில் வளர்ச்சியை நீடித்து நிலைக்கச் செய்யவும், பெருகிவரும் மக்கள் தொகைக்கேற்ப தொடர்ந்து உயர்ந்து வரும் தேவையை நிறைவு செய்யவும், தமிழகத்தில் மின் உற்பத்தியை அதிகரிக்க, இந்த அரசு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. மத்திய அரசு மற்றும் தமிழ்நாடு மின்வாரியத்தின் திட்டங்கள், கூட்டு முயற்சித் திட்டங்கள் மற்றும் தனியார் திட்டங்கள் மூலமாக வரும் 4 ஆண்டுகளில் 8,315 மெகாவாட் திறன் கொண்ட மின் உற்பத்தி நிலையங்களை அமைப்பதற்கான பணிகள் விரைந்து நடைபெற்று வருகின்றன. இவற்றில் கூடங்குளம் அணுமின் நிலையம் இந்த ஆண்டிலும், தேசிய அனல் மின்சக்திக் கழகம் மற்றும் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் கூட்டு முயற்சியாக திருவள்ளூர் மாவட்டம் வல்லூரில் கட்டப்பட்டுவரும் மின்நிலையம், தமிழ்நாடு மின்சார வாரியத்தின் வடசென்னை அனல் மின்சக்தி நிலைய விரிவாக்கத்திட்டம் ஆகியவை வரும் ஆண்டிலும் உற்பத்தியைத் தொடங்க உள்ளன.
30. கடந்த மூன்றரை ஆண்டு காலத்தில், குறிப்பாக, கடும் பொருளாதார நெருக்கடி நிலவிவரும் அண்மைக் காலங்களில் கூட, இந்த அரசின் எளிய அணுகுமுறை மற்றும் ஒளிவு மறைவற்ற செயல்பாடு ஆகியவற்றால் தமிழ்நாட்டில் தொடர்ந்து முதலீடு செய்ய தொழில் முனைவோர் பலர் முன்வந்துள்ளனர். இந்த அரசு பதவியேற்றது முதல் இதுவரை ரூபாய் 46,091 கோடி முதலீட்டிலான 37 புதிய தொழிற்சாலைகளை அமைப்பதற்காக உரிய சலுகைகள் வழங்கப்பட்டு, 2,22,569 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க வழி செய்யப்பட்டுள்ளது. அண்மையில் ரூபாய் 4,000 கோடி முதலீட்டில் பிரான்சு நாட்டைச் சேர்ந்த Ôமிஷலின்’ (Michelin”) டயர் தயாரிப்பு நிறுவனம் தனது சர்வதேசத் தரத்திலான உற்பத்தித் தொழிற்சாலையை சென்னைக்கு அருகே உள்ள கும்மிடிப்பூண்டியில் அமைக்க முன்வந்துள்ளதானது, வாகன உற்பத்தித் தொழிலில் தமிழகத்தின் முன்னணி நிலையை மேலும் உறுதிப்படுத்தியுள்ளது. மேலும், சென்னைக்கு அருகே அமையவுள்ள நிதி நகரம் தமிழகத்தின் எதிர்கால வளர்ச்சியில் ஒரு முக்கியப் பங்காற்றும். இதுமட்டுமன்றி, கங்கைகொண்டான், பெரம்பலூர், பல்லடம், செய்யாறு போன்ற மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் தொழில் முனைவோர் தமது தொழிற்சாலைகளை அமைக்க வகைசெய்து, தொழில் வளர்ச்சியின் பலன்கள் மாநிலமெங்கும் வாழும் மக்களுக்குக் கிடைப்பதை இந்த அரசு உறுதி செய்துள்ளது.
31. தென் மாவட்டங்களின் சமூகப் பொருளாதார பிரச்சினைகளுக்கு ஒரே தீர்வு இம்மாவட்டங்களைத் தொழில் மயமாக்குவதில்தான் உள்ளது என்பதை நன்கு உணர்ந்துள்ள இந்த அரசு, தென் மாவட்டங்களின் தொழில் வளர்ச்சியில் மிகுந்த அக்கறை கொண்டு அந்த மாவட்டங்களில் புதிய தொழிற்சாலைகளை நிறுவ முன்வருவோருக்குக் கூடுதல் சலுகைகள் அடங்கிய Ôதொகுப்புச் சலுகைகள்’ வழங்கும் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. இதன் பயனாக வீடியோகான் நிறுவனம் சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் மற்றும் வீடுகளில் பயன்படுத்தப்படும் மின்னணுப் பொருள்கள் தயாரிக்கும் தொழிற்சாலையை ரூபாய் 1,600 கோடி முதலீட்டில் நிறுவ முன் வந்துள்ளது. மேலும் தமிழ்நாடு கனிம நிறுவனம் மதுரை மாவட்டத்தில் மேலூர் வட்டத்தில் கருங்கல் வெட்டுதல் மற்றும் மெருகேற்றும் பிரிவு ஒன்றினை அமைக்கும் பணியைத் தொடங்கி உள்ளது. மாண்புமிகு மத்திய இரசாயனம் மற்றும் உரத்தொழில் அமைச்சர் அவர்களின் முயற்சியின் காரணமாக இந்தோனேசியா மற்றும் ஹாங்காங்கைச் சார்ந்த ஒரு தொழில் நிறுவனம், மதுரை மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் 2,200 கோடி ரூபாய் முதலீட்டில் டிராக்டர்கள், எஃகு உலோகக் கலவை (steel alloys), வடிப்புகள் (forgings) ஆகியவற்றைத் தயாரிக்கும் தொழிற்சாலைகளை நிறுவ முன்வந்துள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கங்கைகொண்டானில் ஏ.டி.சி. டயர்ஸ் என்ற நிறுவனம் கடந்த திங்களில் உற்பத்தியைத் துவக்கியுள்ளது.
32. நமது மாநிலத்தில் உள்ள பல்வேறு
நகர்ப் பகுதிகள் பெரும் வளர்ச்சி அடைந்து வருவதையும், நகர்ப்புர மக்கள் தொகை வேகமாக அதிகரித்து வருவதையும் கருத்தில் கொண்டு, இப்பகுதிகளில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கும், வறுமை ஒழிப்புத் திட்டங்களுக்கும் இந்த அரசு மிகுந்த முக்கியத்துவம் அளித்து வருகிறது. மத்திய அரசின் பெருந்திட்டமான ஜவஹர்லால் நேரு தேசிய நகர்ப்புர புனரமைப்புத் திட்டத்தின் கீழ், 283 நகரங்களில்
ரூபாய் 9,271 கோடி மதிப்பீட்டிலான 309 திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மாநிலத்தில் முதல் முறையாக நகர்ப்புரங்களில் உள்ள சுயஉதவிக் குழுக்களுக்கும் சுழல்நிதியுதவி வழங்கப்பட்டுவருகிறது.
33. பொதுத்துறையின் மூலமாக ரூபாய் 14,600 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் சென்னை மெட்ரோ இரயில் திட்டத்திற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. மேலும், ரூபாய் 1,081 கோடி மதிப்பீட்டில் வெளி வட்டச் சாலைக்கான பணிகளும் தொடங்க உள்ளன. சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் உள்ள கூவம் போன்ற ஆறுகளைச் சுத்தப்படுத்தி சீரமைப்பதற்காகச் சென்னை நதிநீர் அறக்கட்டளை ஒன்றினை மாண்புமிகு துணை முதலமைச்சர் தலைமையில் அமைக்க அரசு முடிவு செய்துள்ளது. வெளிநாடுகளில் உள்ளது போன்று நகர்ப்புரங்களில் உள்ள ஆற்றுப் பகுதிகளைத் தூய்மையாக்கவும், அழகுபடுத்தவும் தேவையான திட்டங்களை வகுத்து இந்த அறக்கட்டளை செயல்படுத்தும்.
34. கடந்த மூன்றரை ஆண்டுகளில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் குடிநீர் பிரச்சினையைத் தீர்ப்பதற்காகப் பெரும் திட்டங்கள் பல செயல்படுத்தப்பட்டுள்ளன. ரூபாய் 616 கோடி மதிப்பீட்டிலான இராமநாதபுரம் கூட்டுக் குடிநீர்த் திட்டப்பணிகளைக் குறிப்பிட்ட காலத்திற்கு முன்னதாகவே முடித்துப் பயன்பாட்டிற்குக் கொண்டு வந்ததற்கு, இந்த அரசிற்கு எனது பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். நிலத்தடி நீரில் ஃப்ளுரைடு அதிகம் உள்ள கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி மாவட்டங்களின் குடிநீர்ப் பிரச்சினைக்கு ஒரே தீர்வான ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தினை ரூபாய் 1,929 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படுவதற்கான ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டு அவற்றை முடிவு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இத்திட்டப்பணிகள் வரும் மார்ச் திங்களில் தொடங்கும்.
35. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் மகத்தான திட்டங்களில் ஒன்றான மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் நமது மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் மிகச் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பயனாளிகளில்
82 சதவீதம் பெண்களும் 59 சதவீதம் ஆதிதிராவிட மக்களும் பயன்பெற்று வரும் இத்திட்டத்தின் கீழ் இதுவரை தமிழகத்தில் 2,885 கோடி ரூபாய் ஊதியமாக வழங்கப்பட்டுள்ளது. நமது கோரிக்கையை ஏற்று இத்திட்டத்தின் கீழ் தினந்தோறும் வழங்கப்படும் ஊதியத்தை 80 ரூபாயிலிருந்து 100 ரூபாயாக உயர்த்த மைய அரசு இசைந்துள்ளது. உயர்த்தப்பட்ட தின ஊதியம் 1.1.2010 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
36. இந்த அரசு செயல்படுத்திவரும் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் இதுவரை, ரூபாய் 2,041 கோடி மதிப்பீட்டில் 10,104 கிராம ஊராட்சிகளில் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எஞ்சிய 2,514 கிராம ஊராட்சிகளில் இத்திட்டப்பணிகள் வரும் நிதியாண்டில் மேற்கொள்ளப்படும். கடந்த மூன்றரை ஆண்டுகளில், கிராமப்புரச் சாலைகள், பள்ளிகள் போன்றவற்றிற்காக நபார்டு வங்கியிடமிருந்து ரூபாய் 3,536 கோடி நிதியுதவி பெறப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேற்கூறிய பணிகள் அனைத்தையும் விரைந்து நிறைவேற்றி, தமிழகத்தின் கிராமப் பகுதிகளில் வாழும் மக்களுக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் கிடைப்பதை இந்த அரசு உறுதி செய்யும்.
37. மக்களுக்கு உரிய வசதிகளை அளிக்கவும், மாநிலத்தின் வளர்ச்சியில் தமது உரிய பங்கினை ஆற்றவும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு இந்த அரசு எப்போதுமே உறுதுணையாக இருந்து வந்துள்ளது. நகராட்சி அமைப்புகளின் கடன் சுமையைக் களையும் நோக்கத்தோடு ரூபாய் 787 கோடி அளவிலான கடன்களை இந்த அரசு தள்ளுபடி செய்துள்ளது.
2005-2006 ஆம் ஆண்டில் மாநிலத்தின் மொத்த வரி வருவாயில் 8 சதவீதம் என்றிருந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கான பங்கினை படிப்படியாக உயர்த்தி தற்போது 9.5 சதவீதமாக இந்த அரசு வழங்கி வருகிறது. வரும் ஆண்டில் இது 10 சதவீதமாக மேலும் உயர்த்தப்படும். வரும் 2012-2017 ஆண்டு காலத்திற்கான நிதிப்பங்கீட்டு முறை குறித்தும் உள்ளாட்சி அமைப்புகளின் வருவாயைப் பெருக்குவது குறித்தும் ஆய்ந்து பரிந்துரைக்க மாநில நான்காவது நிதிக்குழுவை இந்த அரசு அண்மையில் அமைத்துள்ளது.
38. ஏழை எளியோருக்கு வீட்டுவசதியை ஏற்படுத்த அவர்களுக்குக் குடியிருப்பு மனைகள் அவசியம் என்பதை உணர்ந்து, அரசுப் புறம்போக்கு நிலங்களில் பல ஆண்டுகள் வீடுகட்டிக் குடியிருப்போர் பட்டா பெறுவதற்கு 10 ஆண்டுகளாவது குடியிருந்திருக்க வேண்டும் என்பதை 5 ஆண்டுகளாகக் குறைத்தும், வருமான வரம்பை நீக்கியும் இந்த அரசு ஆணையிட்டுள்ளது. இந்த சீரிய முயற்சியால் கடந்த மூன்றரை ஆண்டுகளில் 6,99,917 வீட்டுமனைப் பட்டாக்கள் ஏழை எளியோருக்கு வழங்கப்பட்டுள்ளன. இந்த குறைந்தபட்சக் குடியிருப்புக் கால வரம்பு மூன்று ஆண்டுகளாகக் குறைக்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இதனால் மேலும் பல்லாயிரக்கணக்கான ஏழை எளிய மக்கள் வீட்டுமனைப் பட்டா பெற்றுப் பயனடைவர்.
39. ஆயிரக்கணக்கான திரைப்படத் தொழிலாளர்கள் உள்ளிட்ட திரைப்படத் துறையினருக்கும் மற்றும் சின்னத்திரைத் துறையினருக்கும் வீட்டு வசதி அளிக்கும் பொருட்டு, அவர்கள் சார்ந்த அமைப்புகளின் கோரிக்கைகளை ஏற்று சென்னைக்கு அருகில் 90 ஏக்கர் நிலத்தை அரசு அளித்துள்ளது. இந்த நிலத்தைப் பயன்படுத்தி அவர்கள் அடுக்குமாடி குடியிருப்புகளைக் கட்டிக் கொள்ள அரசு அனுமதித்துள்ளது.
40. நகர்ப்புரங்களில் உள்ள குடிசைப் பகுதிகளுக்கு மாற்றாக வீடுகள் கட்டித் தருவதற்காக 1970ஆம் ஆண்டு தமிழ்நாடு குடிசைமாற்று வாரியத்தை அமைத்ததும், கிராமப் பகுதிகளில் வாழும் ஏழை எளிய ஆதிதிராவிடர்களுக்காக இலவசமாக வீடுகளை அமைக்கும் திட்டத்தை 1974ஆம் ஆண்டில் நமது நாட்டிலேயே முதல் முறையாகச் செயல்படுத்தியதும், மாண்புமிகு முதலமைச்சர் கலைஞர் அவர்கள்தான் என்பதை நாடறியும். “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்ற குறள் மொழியை மெய்ப்பிக்கும் சான்றாக பெரியார் நினைவு சமத்துவபுரங்களை உருவாக்கியவரும் கலைஞர் அவர்களேயாகும். நமது நாடும் மாநிலமும் நாளும் வளர்ந்து, மக்களின் வாழ்க்கைத்தரம் மென்மேலும் உயர்ந்து வரும் இன்றைய நல்ல சூழலிலும், மக்களின் மிக அடிப்படைத் தேவையான வீட்டு வசதி இன்னும் முழுமையாக நிறைவு செய்யப்படாத நிலையை நாம் வேதனையுடன் காண்கிறோம். சிறப்புமிகு திட்டங்கள் பலவற்றால் சாதாரண மக்களின் சமூகப் பாதுகாப்பையும் உணவுப் பாதுகாப்பையும் உறுதி செய்ததோடு, கடந்த மூன்றரை ஆண்டுகளில் புதுக் கட்டமைப்பு வசதிகளையும் உருவாக்கி இந்த அரசு மகத்தான சாதனைகள் புரிந்துள்ளபோதிலும், மாநிலமெங்கும் ஏழை எளியோர் மண் சுவர்களால் ஆன கூரை வீடுகளில் வசித்துவருவதால், இயற்கை இன்னல்களை எதிர்கொள்ளும் துயர்மிகு நிலை இன்னமும் தொடர்கிறது. கடந்த மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் பல்வேறு ஆய்வுகளின் அடிப்படையில், நமது மாநிலத்தில் ஊரகப் பகுதிகளில் மட்டும் இத்தகைய வீடுகளின் எண்ணிக்கை சுமார் 21 இலட்சம் என அறியப்பட்டுள்ளது. தற்போது மத்திய அரசின் நிதியுதவியுடன் நாடு தழுவிய அளவில் செயல்படுத்தப்பட்டுவரும் இந்திரா வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் மட்டும் இக்குடிசைகளை நமது மாநில அளவில் நிரந்தர இல்லங்களாக மாற்ற வேண்டும் என்றால் அதற்கு இன்னும் 30 ஆண்டுகள் ஆகும். இந்த நிலையை நெஞ்சில் நிறுத்தி, முதற்கட்டமாக, ஊரகப்பகுதிகளில்
21 இலட்சம் வீடுகளில் வசிக்கும் ஏழை எளியோரின் வாழ்வில் ஒளியேற்றும் வகையில் இந்த வீடுகள் அனைத்தையும் கான்கிரீட் கூரை கொண்ட நிரந்தர இல்லங்களாக தமிழக அரசின் நிதியைக் கொண்டே மாற்றி அமைத்து, அவற்றை இலவசமாக அளிக்கும் மாபெரும் திட்டம் ஒன்றை இந்த அரசு வகுத்துள்ளது. 2010-2011 ஆம் ஆண்டு தொடங்கி, இந்தத் திட்டத்தின் கீழ் ஆறு ஆண்டு காலத்தில் மண்சுவர்களால் ஆன
21 இலட்சம் கூரைவீடுகளுக்குப் பதிலாக, நிரந்தர வீடுகள் இந்த அரசால் கட்டித்தரப்படும் என்று பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இத்திட்டத்தின் முதல் ஆண்டான வரும் நிதியாண்டில், மூன்று இலட்சம் நிரந்தர வீடுகள் ரூபாய் 1,800 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும். கிராமப் பகுதிகளில் கூரை வீடுகளே இல்லாத
நிலையை உருவாக்கும் இந்த உன்னதத் திட்டம்
Ôகலைஞர் வீட்டுவசதித் திட்டம்’ என்று அழைக்கப்படும்.
41. ஏற்கெனவே கலைக்கப்பட்ட நலவாரியங்களை இந்த அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர், மீண்டும் அமைத்து பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது. அமைப்புசாரா தொழிலாளர் நலவாரியங்கள் மூலமாக இதுவரை 7,38,690 பயனாளிகளுக்கு ரூபாய் 184 கோடி மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
42. வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் மாதாந்திர உதவித் தொகை பெறுவதற்கான ஆண்டுக் குடும்ப வருமான உச்சவரம்பை ரூபாய் 24,000-லிருந்து ரூபாய் 50,000 ஆக இந்த அரசு உயர்த்தியுள்ளது. இத்திட்டத்தின் கீழ் இதுவரை 3,53,801 இளைஞர்களுக்கு ரூபாய் 240 கோடி வழங்கப்பட்டுள்ளது.
43. கிராமப்புரங்களில் படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்புகளைப் பற்றிய தகவல்களைச் சரிவர அறியவும் வேலைவாய்ப்புகளை பெறத் தேவையான திறன்களை வளர்த்துக் கொள்ளவும் வழியின்றி இருக்கின்ற நிலையை மாற்றி, தனியார் துறையில், குறிப்பாகத் தகவல் தொழில்நுட்பத் துறையில் உள்ள பல்வேறு விதமான வேலைவாய்ப்புகள் குறித்து இளைஞர்கள் அறிந்து கொள்ளவும், இந்த வேலைவாய்ப்புகளைப் பெறக்கூடிய வகையில் அவர்களைத் தயார்படுத்திக் கொள்வதற்கும் ஏதுவாக, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தனியார் தொழில் நிறுவனங்கள் பங்கேற்கும் வேலைவாய்ப்பு முகாம்கள் தனியார் தொண்டு அமைப்புகள் மூலம் நடத்தப்பட்டு வருகின்றன. இம்முகாம்களில் பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் பங்கேற்று பயன் பெற்றுள்ளனர். தமிழக அரசின் எல்காட் நிறுவனமும் தனியார் தொழில் அமைப்புகளுடன் இணைந்து இந்த மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தி வருகிறது. தனியார் தொண்டு அமைப்புகளின் பயனுள்ள இம்முயற்சிகளைப் பாராட்டுவதோடு தமிழக அரசு தொடர்ந்து தனது நல்லாதரவையும் ஒத்துழைப்பையும் நல்கும்.
44. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் நலனுக்கு இந்த அரசு தலையாய முக்கியத்துவம் அளித்துவந்துள்ளது. முன்னெப்போதும் இருந்திராத வகையில் நமது மாநிலத்தின் ஆண்டுத் திட்ட ஒதுக்கீடான ரூபாய் 17,500 கோடியில் 15 சதவீதம் அதாவது ரூபாய் 2,615 கோடி ஆதிதிராவிடருக்கான துணைத் திட்டத்தின் கீழ் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அவர்களுள் மிகவும் பின்தங்கியுள்ள அருந்ததியர்களுக்கு 3 சதவீத உள் ஒதுக்கீடு அளித்து அவர்களது சமூகப் பொருளாதார முன்னேற்றத்திற்கு வழி வகுத்துள்ளது. அரசின் இந்த நடவடிக்கையால் இந்த ஆண்டு அருந்ததியர் வகுப்பைச் சேர்ந்த 56 மாணவர்கள் மருத்துவக் கல்லூரிகளிலும், 1,165 மாணவர்கள் பொறியியல் கல்லூரிகளிலும் சேர்ந்து பயில இயன்றுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
45. தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதிக் கழகத்தால் வேளாண்மை சாராத தொழில்களை மேற்கொள்ள ஆதிதிராவிட சமுதாயத்தைச் சேர்ந்த தொழில்முனைவோருக்குக் கடன் வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் இக்கடன்களைத் திருப்பிச் செலுத்த இயலாத நிலையில் உள்ளனர் என்றும், இக்கடன்களை இரத்து செய்ய வேண்டுமென்றும் அரசுக்கு அளித்துள்ள கோரிக்கையை ஏற்று, 31.3.2009 அன்று நிலுவையிலுள்ள ரூபாய் 83 கோடி அசல் மற்றும் வட்டித் தொகையை முழுமையாக இரத்து செய்ய அரசு முடிவு செய்துள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இதனால் 53,524 ஆதிதிராவிடர் தொழில் முனைவோர் பயன் பெறுவர்.
46. நமது மாநிலத்தில் சில பகுதிகளில் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினராக அங்கீகரிக்கப்பட்டுள்ள சமூகங்களைச் சார்ந்தவர்கள், மாநிலத்தில் மற்ற பகுதிகளில் குடியேறும்போது அப்பகுதிகளில் அவர்களுக்கான சான்றிதழ் கிடைப்பதில் உள்ள இன்னல்களைக் களைந்து, அத்தகையோருக்கு மாநிலமெங்கும் இச்சான்றிதழ்கள் கிடைத்திட இந்த அரசு ஆணையிட்டுள்ளது. மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவித இட ஒதுக்கீடு கிடைத்திட இந்திய அரசியல் சட்டத்தில் உரிய திருத்தத்தைக் கொண்டுவந்து வழிவகை செய்யப்பட்டுள்ள நிலையில், இந்து மற்றும் பௌத்த மதங்களைச் சார்ந்த ஆதிதிராவிடர்களுக்கு கிடைத்துவரும் ஒதுக்கீட்டுச் சலுகையானது, கிறித்தவ மதத்தைச் சார்ந்த ஆதிதிராவிடர்களுக்கும் கிடைத்திட ஆவன செய்யவேண்டும் என மத்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்.
47. 1996-2001 ஆம் ஆண்டு காலத்தில்
145 சமத்துவபுரங்களை இவ்வரசு நிறுவியது. மேலும்,
95 சமத்துவபுரங்கள் மூன்றாண்டு காலத்தில் அமைக்கப்படும் என்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறிவித்ததற்கேற்ப, இதுவரை 29 சமத்துவபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், இந்த நிதியாண்டில் 30 சமத்துவபுரங்கள் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. வரும் நிதியாண்டில் எஞ்சிய 36 சமத்துவபுரங்கள் உருவாக்கப்படும்.
48. மகளிருக்குச் சமுதாயத்தில் உரிய அங்கீகாரத்தையும், அதிகாரத்தையும் வழங்கி, சமுதாய வளர்ச்சியில் அவர்கள் தமது உரிய பங்கினை ஆற்றிட இந்த அரசு எப்போதுமே உறுதுணையாக இருந்துள்ளது. மகளிருக்கு சமச் சொத்துரிமையையும், வேலைவாய்ப்பு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் 33 சதவீத இட ஒதுக்கீட்டையும் இந்த அரசுதான் முன்பே வழங்கியது. இந்த வகையில், உள்ளாட்சி அமைப்புகளில் மகளிருக்கான இட ஒதுக்கீட்டை 50 சதவீதமாக உயர்த்துவதற்கான மத்திய அரசின் முடிவை இந்த அரசு வரவேற்கிறது. நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிப்பதற்கான சட்டம் உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டும் என்று அண்மையில் நாடாளுமன்றக் குழு பரிந்துரைத்திருப்பது, இருண்ட வானில் ஒரு ஒளிக் கீற்றுப் போல் மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இந்நிலையில், மேலும் காலம் தாழ்த்தாது இச்சட்டத்தை உடனடியாக நிறைவேற்றித் தருமாறு கேட்டுக்கொள்கிறோம்.
49. 20 ஆண்டுகளுக்கு முன்பு திராவிட முன்னேற்றக் கழக அரசால் தொடங்கப்பட்ட மகளிர் சுயஉதவிக் குழு இயக்கம் இன்று ஒரு மாபெரும் சமூக இயக்கமாக வேரூன்றி வளர்ந்துள்ளது. இந்த இயக்கத்தை மேலும் வலுப்பெறச் செய்யும் வகையில், கடந்த மூன்றரை ஆண்டுகளில் 16.59 இலட்சம் உறுப்பினர்களைக் கொண்ட 1,07,024 மகளிர் சுயஉதவிக் குழுக்கள் தொடங்கப்பட்டுள்ளன. மேலும், ரூபாய் 150 கோடி நிதி ஒதுக்கி, தகுதியுள்ள அனைத்துச் சுய உதவிக் குழுக்களுக்கும் சுழல்நிதி வழங்க ஆவன செய்யப்பட்டுள்ளதோடு, இக்குழுக்களுக்கு ரூபாய் 5,022 கோடி வங்கிக் கடனும் அளிக்கப்பட்டுள்ளது.
50. மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கக்கூடிய கடல் மீன்பிடித் தொழில் மேலாண்மை மற்றும் நெறிப்படுத்துதல் சட்டத்தை மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் கோரிக்கையை ஏற்று, அண்மையில் நடந்த நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் கொண்டுவராமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும், மாண்புமிகு மத்திய வேளாண்மைத் துறை அமைச்சர் அவர்கள் இச்சட்ட முன்வடிவு மீனவச் சமுதாய மக்கள் நலன் குறித்த முக்கியமான சட்ட வரைவு என்பதால் மீனவர்களின் நலன் முழுவதும் பாதுகாக்கப்படும் வரையில் இம்மியளவும் முன்செல்ல மாட்டோம் என்று உறுதியளித்துள்ளார். மீனவர் நலனுக்கு எதிரான எந்த ஒரு சட்டத்தையும் மத்திய அரசு இயற்றக் கூடாது என்று இந்த அரசு உறுதியாக வலியுறுத்துகிறது. மேலும், கடலோரப் பகுதிகளில் மீன்பிடிக்கும் தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் அடிக்கடி சந்திக்க நேரிடும் இன்னல்களைக் களைய மத்திய அரசு உடனடியாக ஆவன செய்யவேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம். கச்சத் தீவில் தமிழக மீனவர்களுக்கு ஏற்கனவே 1976ஆம் ஆண்டுவரை இருந்த பாரம்பரிய உரிமைகளை மீண்டும் பெற்றுத்தர மத்திய அரசைத் தொடர்ந்து வலியுறுத்துகிறோம்.
51. சுனாமியால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு இந்த அரசு பதவியேற்ற பின், பல்வேறு நல உதவிகள் அளிக்கப்பட்டுள்ளன. ரூபாய் 110 கோடி செலவில் மீனவர்களுக்கு வலைகள், மிதி வண்டிகள், ஒளி விளக்குகள், உயிர்காக்கும் கவச உடைகள் மற்றும் முதலுதவிப் பெட்டிகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், விசைப்படகு மீனவர்கள் பயன்படுத்தும் மானிய விலை டீசலின் அளவு மாதமொன்றுக்கு 1,000 லிட்டர் என்பது 1,500 லிட்டராக உயர்த்தப்பட்டுள்ளது. சுனாமியால் தங்களது விசைப்படகுகளை இழந்த மீனவர்கள் வங்கிகள் மூலம் கடன் பெற்று புதிய விசைப்படகுகளை வாங்கியுள்ளதாகவும், வாங்கிய வங்கிக் கடன்களைக் குறித்த காலத்தில் திருப்பிச் செலுத்த இயலாது இருக்கின்றனர் என்றும், இக்கடன்களைத் திருப்பிச் செலுத்த தமிழக அரசு உதவிபுரிய வேண்டும் என்றும் விசைப்படகு மீனவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். அவர்களது வேண்டுகோளின் அடிப்படையில் வங்கிகளுடன் கலந்து ஆலோசித்து விசைப்படகு மீனவர்களின் கடன் பளுவை நீக்கும் வகையில் ஒரு திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் சுனாமியால் பாதிக்கப்பட்ட மீனவர்கள் வங்கிகளிடமிருந்து பெற்ற கடனில், அசல் முழுவதையும் அரசே வங்கிகளுக்குத் திருப்பிச் செலுத்தும். இக்கடன்களின் மீதான நிலுவை வட்டியை ரத்து செய்ய வங்கிகள் இசைந்துள்ளன. இதனால் தமிழக அரசுக்கு ரூபாய் 80 கோடி செலவு ஏற்படும்.
52. இலங்கையில் தமது சொந்த நாட்டிலேயே அகதிகளாக வாழ நேரிட்டு, சொல்லொணாத் துயரங்களுக்கு ஆட்பட்டுவரும் அம்மக்களுக்கு நிவாரணப் பொருள்களை வழங்குவதற்காக ரூபாய் 52 கோடி அளவிற்கு நிதி திரட்டி, அத்தியாவசியப் பொருள்களை இந்த அரசு அனுப்பிவைத்தது. இலங்கைத் தமிழர் தங்கள் வாழ்விடங்களுக்குத் திரும்பிச் சென்று மறுவாழ்வு பெறுவதற்காக, ரூபாய் 1,000 கோடி நிதியுதவியை அறிவித்துள்ள மத்திய அரசிற்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
53. இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்டு முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருந்த தமிழர்களில் ஒரு இலட்சத்திற்கு மேற்பட்டோர், மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அயராத முயற்சியினால், தங்கள் சொந்த இடங்களுக்குத் திரும்ப வழி வகை செய்யப்பட்டது. இவர்கள் தவிர இன்னும் முகாம்களிலேயே தொடர்ந்து வசித்து வருபவர்கள் அனைவரும் இந்த மாத இறுதிக்குள் அவரவர்களது சொந்த ஊருக்குத் திரும்பி, மறுவாழ்வு பெற வழி செய்யப்படும் என இலங்கை அரசு உறுதி அளித்திருப்பது சிறிது ஆறுதலாக இருப்பினும், இவர்கள் அனைவரும் அனைத்து உரிமைகளோடும், உரிய பாதுகாப்போடும் வசித்திடவும், போரின்போது இழந்த வாழ்வாதாரத்தை மீண்டும் பெறவும், இலங்கைத் தமிழர்களுக்கு மன நிறைவு அளிக்கும் வகையில் நிரந்தர அரசியல் தீர்வை விரைவில் காணவும், இலங்கை அரசைத் தொடர்ந்து வலியுறுத்தி ஆவன செய்யவேண்டும் என்று இந்தியப் பேரரசைக் கேட்டுக்கொள்கிறோம்.
54. மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறிவித்தவாறு தமிழகத்தில் உள்ள இலங்கைத் தமிழர் முகாம்கள் அனைத்தையும் மாண்புமிகு அமைச்சர்கள் நேரில் பார்வையிட்டு அங்கு வசிக்கும் மக்களின் தேவைகளைக் கண்டும் கேட்டும் அறிந்து விரிவான அறிக்கைகளை அரசிடம் அளித்தனர். அதன்படி, குடிநீர் வசதி, சாலைவசதி, வீட்டுவசதி போன்ற பல்வேறு பணிகளுக்காக ரூபாய் 100 கோடி நிதி ஒதுக்கப்பட்டுப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதுமட்டுமன்றி, முகாம்களில் வாழும் அனைத்துக் குடும்பங்களுக்கும் இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் வழங்கப்பட்டு, அவர்கள் கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தில் உறுப்பினர்களாகவும் சேர்க்கப்பட்டுள்ளனர். வெகுகாலமாக அவர்கள் நமது நாட்டில் எவ்வித பிரச்சினைக்கும் இடம் கொடுக்காமல் வாழ்ந்து வருவதைக் கருத்தில் கொண்டு, அவர்களுக்கு நிரந்தர வாழ்வுரிமை வழங்கப்பட வேண்டும் என்று மத்திய அரசை இந்த அரசு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.
55. தமிழ் மொழியைச் செம்மொழியாக அறிவித்து பெருமைப்படுத்தியதோடு, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தையும் சென்னையில் அமைத்து, மத்திய அரசு பெருமைப்படுத்தியுள்ள சூழ்நிலையில், கோவை மாநகரில் வரும் ஜூன் திங்கள் 23 ஆம் நாள் முதல் 27 ஆம் நாள் வரை உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு மிகச் சிறப்பாக நடத்தப்படும் என மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறிவித்துள்ளார். இதற்காக முதலமைச்சர் தலைமையில் மாநாட்டுத் தலைமைக் குழுவும், 20 குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன.
56. கோவையில் உள்ள கொடிசியா வளாகத்தில், உலகெங்கும் இருந்து பெரும் திரளாக வரவிருக்கும் தமிழ் அறிஞர்களும், ஆர்வலர்களும் ஒன்று கூடி, தமிழ் மொழி, அதன் வளர்ச்சி மற்றும் தேவைகள் குறித்தும் தமது கருத்துக்களை பரிமாறிக்கொள்ள வாய்ப்பாக 20 அரங்கங்கள் அமைக்கப்படவுள்ளன. இந்த வளாகத்தின் அருகே பல்லாயிரம் பேர் அமரக்கூடிய மாநாட்டுப் பந்தல் அமைக்கப்படவுள்ளது. இம்மாநாட்டின் நினைவாக சர்வதேசத் தரத்திலான தாவரவியல் பூங்கா ஒன்று Ôசெம்மொழிப் பூங்கா’ என்ற பெயரில் கோவையில் அமைக்கப்படும்.
57. இயற்கை என்ற வலையில் மானுடம் ஒரு இழை தான், இவ்விழை தனித்திருக்க முடியாது என்ற உண்மையை உணர்ந்து, சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும், உலகின் வெப்பநிலை மேலும் உயராமல் தடுக்கவும், தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்ற கொள்கை முடிவினை, அண்மையில் கோபன்ஹேகன் நகரில் ஐக்கிய நாடுகள் மன்றத்தால் நடத்தப்பட்ட சுற்றுச்சூழல் பாதுகாப்பு மாநாட்டில் உலக நாடுகள் எடுத்துள்ளன. நமது பிரதமர் மாண்புமிகு மன்மோகன்சிங் அவர்களும் இதற்கான செயல் திட்டங்களை நமது நாடும் செயல்படுத்தும் எனக் குறிப்பிட்டுள்ளார். எதிர்காலச் சிந்தனையோடு முற்போக்கான பல சமூகப் பொருளாதாரத் திட்டங்களைச் செயல்படுத்திவரும் நமது அரசும் இக்குறிக்கோளை எட்டும் பணியில் தனது உரிய பங்கினைச் செவ்வனே ஆற்றும். இந்த வகையில், சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும் தூய்மையான இயற்கை எரிசக்தியை வளர்க்கவும் தேவையான திட்டங்களை வகுத்து இந்த அரசு செயல்படுத்தும். இதற்காக Ôசுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் புதுப்பிக்க வல்ல எரிசக்தி மேம்பாட்டு நிதி’ (Environment Protection and Renewable Energy Development Fund) ஒன்றினை இந்த அரசு உருவாக்கும்.
58. தற்போது நிலவிவரும் பொருளாதாரத் தேக்கநிலையால் அரசுக்கு கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ள இந்தச் சூழ்நிலையிலும், மத்திய அரசின் ஆறாவது ஊதியக் குழு பரிந்துரைத்த ஊதிய விகிதங்களை மாநில அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கும் இந்த அரசு நடைமுறைப்படுத்தியுள்ளது. சத்துணவுப் பணியாளர்கள் மற்றும் அங்கன்வாடிப் பணியாளர்களின் நீண்டநாள் கோரிக்கையினை ஏற்று அவர்களுக்குச் சிறப்பு காலமுறை ஊதியமும், சிறப்பு ஓய்வூதியமும் வழங்கப்பட்டுள்ளன. அரசு அலுவலர்களின் நியாயமான கோரிக்கைகளைத் தொடர்ந்து நிறைவேற்றி வரும் அதே வேளையில், அரசுத் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பெரும் பணியில் அவர்கள் அனைவரும் முழு ஈடுபாட்டோடும் பொறுப்புணர்வோடும் செயல்பட வேண்டும் என்று இந்த அரசு கேட்டுக்கொள்கிறது.
59. அரசு காலிப் பணி இடங்களுக்கு தேர்வாணையத்தின் மூலமாகவே முறையான பணியாளர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற நிலை உள்ளது. இடையில் ஒரு சில பணியிடங்கள் காலியாகும் போது * அவற்றை நிரப்புவதற்குத் தேர்வாணையத்தின் தேர்வுப் பட்டியல் கிடைப்பதில் தவிர்க்க முடியாத தாமதம் ஏற்படும்போது, மக்களுக்குத் தேவையான அத்தியாவசிய அரசுப் பணிகளில் தாமதம் ஏற்படுவதைத் தவிர்க்கும் பொருட்டு * அந்தப் பணிகளில் முறையாக புதிய பணியாளர்கள் அமர்த்தப்படும் வரையில் * ஓய்வு பெற்ற அரசு அலுவலர்களை காலியாக உள்ள சில பணியிடங்களுக்கு தற்காலிகமாக நியமித்துக் கொள்ள முனைந்திடுவதை * வேலைவாய்ப்புக்காகக் காத்திருக்கும் இளைஞர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் நடவடிக்கை என்றோ * வேலைவாய்ப்புத் தடையாணை போன்ற ஆபத்தான ஒன்று என்றோ யாரும் கருத வேண்டாமென்று இந்த அரசு தெளிவுபடுத்த விரும்புகிறது.
60. புதிய சட்டமன்றப் பேரவை மற்றும் தலைமைச் செயலக வளாகத்தை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் அமைத்திடத் திட்டமிடப்பட்டு, பணிகள் மிக வேகமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நவீன வசதிகளுடன் கூடிய எழில் ததும்பும் இந்த மாபெரும் வளாகம், மாண்புமிகு பேரவை உறுப்பினர்களுக்கும் அரசு அலுவலர்களுக்கும் பயனுள்ளதாக இருப்பதோடு, தமிழகத்திற்கு மேலும் பெருமை சேர்ப்பதாக அமையும். அதுமட்டுமன்றி, சென்னையில் அமைக்கப்பட்டுவரும் உலகத் தரம்வாய்ந்த அறிஞர் அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்திற்கான பணிகளும் விரைவில் நிறைவுறும் நிலையில் உள்ளன.
61. திருவள்ளுவர் ஆண்டு பிறக்கும் தைத் திங்கள் முதல் நாளே புத்தாண்டுத் தொடக்கம் என அனைத்துத் தமிழ் அறிஞர்களும் சான்றோர்களும் ஒப்புக்கொண்ட உண்மையின் அடிப்படையில்; சட்டம் இயற்றி, கொண்டாடி வருவதைத் தொடர்ந்து இன்னும் சில நாட்களில் வரவிருக்கின்ற அந்தத் தமிழ்ப் புத்தாண்டு பொங்கல் திருநாளுக்கான வாழ்த்துக்களையும் இந்த உரையின் வாயிலாகத் தெரிவித்துக் கொள்வதோடு, தமிழ்நாட்டு மக்கள் அனைவரும், அந்நாளை தம் வாழ்விலோர் திருநாளாகக் கொண்டாடி மகிழ வேண்டுமென்றும் கேட்டுக் கொள்கிறேன்.
62. இவ்வாறு ஒல்லும் வகையெல்லாம் உழைப்போருக்கும், உழவர் பெருமக்களுக்கும் மற்றும் அனைத்துத் தரப்பினருக்கும் உவகையளிக்கும் வண்ணம் பணி புரிந்து மக்கள் நலம் பாராட்டும் இந்த அரசுக்கு, என்றும் தோன்றாத் துணையாய் இருப்பீர் என்ற நம்பிக்கையோடு என் உரையை நிறைவு செய்கிறேன்.
வணக்கம்
ஜெய்ஹிந்த்
http://wp.me/phwUG-sE
புருனோ 9:14 pm on June 25, 2010 Permalink |
கொல்ல வேண்டும் என்றால் நேரடியாக துப்பாக்கி வைத்து ப்டகிலேயே சுட்டிருக்க வேண்டியது தானே
kanummc 12:59 am on June 26, 2010 Permalink |
enna chinnapillaithanama na kaelvi kekkureenga? veera aishwarya va kidnap pannalaina ,eppidi 2.5 hrs namma kaluththa arukka mudiyum? why blood, same blood dhan!
புருனோ 8:28 pm on June 26, 2010 Permalink |
//eppidi 2.5 hrs namma kaluththa arukka mudiyum?//
ஹி ஹி ஹி
vskesav 3:20 pm on July 5, 2010 Permalink |
nalu sandai @ five songs ok?