ஒலி அரசியல்

வெள்ளை, கறுப்பு இரண்டும் நிறங்கள் தானே, வேற்றுமை என்ன என்று கேட்பவர்களுக்கு நிற வெறி அரசியல் புரியாது.

அதே போல் தமிழ், கிரந்தம் / ஆங்கிலம் இரண்டும் ஒலிகள் தானே என்று கேட்பவர்களுக்கு ஒலிகளுக்குள் உயர்வு தாழ்வு கற்பித்து, அதனைப் பேசும் பாமர, உள்நாட்டு மக்களை அந்நியப்படுத்தும், பரிகசிக்கும் ஒலி அரசியல் புரியாது.

தமிழை வேண்டும் என்றே எப்படி வேண்டுமானாலும் சிதைத்து கிரந்த / ஆங்கில ஒலியுடன் பேசுவது நாகரிகம் / ஒயில் / புதுப்பாணி. ஆனால், பிற மொழி ஒலிகளைத் தமிழ் இயல்புக்கு ஏற்ப உள்வாங்கிப் பேசுவது பாமரத்தனம் என்ற ஒப்புமையை நோக்கினால் ஒலி – > மொழி -> அதனைப் பேசும் இனத்துக்கு எதிரான அரசியல் புரியும்.

காந்தி சட்டை வாங்கக் காசு இல்லாமல் கதராடை அணியவில்லை. அங்கு கதராடை உடுப்பு என்பது ஓர் அரசியல் அடையாளம். கிரந்தம் உச்சரிக்க, எழுத இயன்றும் மறுப்பது என்பதும் இதனைப் பற்றி புரியாத, பேச இயலாத, பேசுத் தேவையில்லாத மக்களின் சார்பாக முன்வைக்கப்படும் ஓர் அரசியல், சமூகவியல் அடையாளமே. பிற மொழி கற்றவரும் தமிழில் உள்ள ஒலிகளை மதிப்பு கொடுத்துப் பேசும் போது தான், தமிழின் சீர்மையும் தமிழரின் மதிப்பும் மீட்டெடுக்கப்படும்.