அரசு பள்ளியில் மகளை சேர்த்த ஈரோடு கலெக்டர் மதியம் சத்துணவு சாப்பிடவும் ஏற்பாடு ஈரோடு, ஜுன்.16- ஈரோடு மாவட்ட கலெக்டர் அனந்தகுமார் தனது மகளை தொடக்கப்பள்ளியில் 2-ம் வகுப்பில் சேர்த்தார். ஏழை குழந்தைகளுக்காக மதியம் வழங்கப்படும் சத்துணவை மகள் சாப்பிடவும் அவர் ஏற்பாடு செய்து இருக்கிறார். பள்ளிக்கூடம் திறந்தது ஈரோடு, குமலன் குட்டை பகுதியில் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கூடம் உள்ளது. கோடை விடுமுறைக்குப்பின் நேற்று காலை அந்த பள்ளிக்கூடம் திறக்கப்பட்டது. மாணவ-மாணவிகள் புதிய உற்சாகத்துடன் பள்ளிக்கு வந்து கொண்டு இருந்தனர். காலை இறைவணக்கம் முடிந்ததும், பள்ளியின் தலைமை ஆசிரியை ராணி புதிய மாணவர்களை பள்ளியில் சேர்க்கும் பணியில் ஈடுபட்டு இருந்தார். ஈரோடு தொடக்க கல்வி அதிகாரி அருள்மொழி, மாணவர் சேர்க்கைப் பணியை பார்வையிட்டுக் கொண்டு இருந்தார். மகளை சேர்க்க வந்த கலெக்டர் அப்போது அந்த பள்ளிக்கூடத்தை நோக்கி மாவட்ட கலெக்டர் அனந்தகுமார் வந்து கொண்டு இருந்தார். மாவட்ட கலெக்டர் காலை நேரத்தில் பள்ளிக்கூடத்திற்கு வந்திருப்பதை பார்த்ததும், ஆசிரியைகளும், பெற்றோர்களும் திடீர் சோதனைக்காக வந்திருக்கலாம் என்று கருதி, பரபரப்புடன் அவரை வரவேற்றனர். அப்போதுதான் அவருடன் கலெக்டரின் மனைவி ஸ்ரீவித்யா, 7 வயது மகள் கோபிகா ஆகியோரும் வந்திருப்பதை அறிந்தனர். தனது மகளை பள்ளியில் சேர்ப்பதற்காக வந்திருப்பதாக கலெக்டர் கூறியதும், அதை நம்ப முடியாமல் அவர்கள் திகைத்து நின்றனர். பெற்றோர் அமரும் பெஞ்சில் பின்னர் சுதாரித்துக்கொண்ட தலைமை ஆசிரியை ராணியும், தொடக்க கல்வி அதிகாரி அருள்மொழியும் கலெக்டரை தலைமை ஆசிரியரின் அறைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு தலைமை ஆசிரியரின் இருக்கையில் அமரச் சொன்னதற்கு மறுத்த கலெக்டர், புதிய மாணவிகளை சேர்ப்பதற்காக வந்த பெற்றோர் அமர்ந்திருந்த பெஞ்சில் அமர்ந்தார். சீருடை-மதிய உணவு பிறகு தனது மகள் கோபிகாவை 2-ம் வகுப்பில் தமிழ் வழி கல்வியில் சேர்ப்பதற்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தலைமை ஆசிரியையிடம் வழங்கினார். முறைப்படி 2-ம் வகுப்பில் சேர்க்கப்பட்டதும், கலெக்டர் அனந்தகுமார் கோபிகாவை மற்ற மாணவர்-மாணவிகளுடன் வகுப்பில் அமரவைத்தார். தனது மகளுக்கும் மற்ற மாணவர்களைப் போல் பள்ளியில் சத்துணவு மற்றும் சீருடை வழங்குவதற்கும் கலெக்டர் ஏற்பாடு செய்துவிட்டு கலெக்டர் அனந்தகுமார் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். முன்னதாக, பள்ளியின் புரவலர் திட்டத்தில் கலெக்டரும், அவருடைய மனைவியும் தங்களை இணைத்துக்கொண்டனர். பெற்றோர் வியப்பு சாதாரண உழைக்கும் வர்க்கத்தை சேர்ந்தவர்கள் கூட, தங்கள் பிள்ளைகள் தனியார் பள்ளியில் ஆங்கில வழியில் படிக்க வேண்டும் என்ற மோகம் அதிகரித்துள்ள இந்த காலத்தில், மாவட்ட கலெக்டர் ஒருவர் தனது மகளை அரசு தொடக்கப்பள்ளியில் சேர்த்து இருப்பது, அங்கிருந்த ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் வியப்பை ஏற்படுத்தியது. மகளை அரசு பள்ளிக்கூடத்தில் சேர்த்து உள்ளது குறித்து கலெக்டர் அனந்தகுமாரிடம் கேட்டபோது, இது தன்னுடைய தனிப்பட்ட விஷயம் என்று அவர் பதில் அளித்தார். ஈரோடு கலெக்டர் அலுவலகத்துக்கு எதிரே உள்ள சம்பத் நகரில் கலெக்டரின் பங்களா அமைந்துள்ளது. இங்கிருந்து சுமார் 1/2 கிலோ மீட்டர் தொலைவில் இந்த தொடக்கப்பள்ளி உள்ளது. கலெக்டர் அனந்தகுமாரின் சொந்த ஊர் கோவை மாவட்டம் பல்லடம் வதம்பசேரி ஆகும். இவர் கால்நடைத்துறையில் ஆராய்ச்சி பட்டம் பெற்றவர். 2003-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ். தேர்வு பெற்ற அவர், கடந்த ஆண்டு தர்மபுரி மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டார். புதிய அரசு அமைந்ததும் ஈரோடு மாவட்ட கலெக்டராக அனந்தகுமார் நியமிக்கப்பட்டார். கலெக்டரின் மகள் கோபிகா, தர்மபுரியில் உள்ள மெட்ரிகுலேஷன் பள்ளியில் கடந்த ஆண்டு 1-ம் வகுப்பு படித்தவர்.
http://dailythanthi.com/article.asp?NewsID=653531&disdate=6/16/2011
-
ரவி
Reply