சமச்சீர் கல்வி (எதிர்) CBSE

தமிழ்நாட்டில் சமச்சீர் கல்வி அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, சில மெட்ரிக் பள்ளிகள் CBSE முறை பாடத்திட்டத்துக்கு மாறத் தொடங்கி உள்ளன போலும். பையனைத் தொடர்ந்து சமச்சீர் கல்வியில் பயிற்றுவிக்கலாமா இல்லை CBSEக்கு மாற்றலாமா என்று உறவினர் ஒருவர் ஆலோசனை கேட்டார்.

கவலைக்கான காரணங்கள்:

1. சமச்சீர் கல்வியில் பாட அளவு (!) குறைவாக உள்ளது. இதனால் அறிவு குறையுமா, மற்ற மாணவர்களுடன் பிற்காலத்தில் போட்டி போட முடியுமா?

2. தொடர்ந்து இந்தி படிக்க முடியுமா?

3. ஒரே பள்ளியில் சமச்சீர், CBSE இரண்டு முறைகளும் இருந்தால் CBSE முறைக்கே கூடுதல் முக்கியத்துவம் கொடுப்பார்கள். ஏற்கனவே மாநில அரசுப் பாடத்திட்டத்தில் பயிலும் மாணவர்கள் அதிக கவனிப்பின்றி வளர்கிறார்கள். எனவே, சமச்சீர் கல்வியில் பயில்வதனால் பையனக்குத் தகாத பழக்கங்கள் வருமா?

4. கூடப் படிக்கிற பிள்ளைகள் அனைவரும் CBSEக்கு மாறுகிறார்கள். அவர்களோடு இவனும் மாறினால் பழகிய நண்பர்களோடே தொடரலாம்.

பையன் படிக்கப் போவதோ நான்காம் வகுப்பு தான் !

எனது பதில்கள்:

1. இருக்கிற பாடத்தின் அளவு கடுமையாக இருப்பதால் தான் குழு அமைத்து ஆய்வு செய்து சுமையைக் குறைத்து எளிமையாக்கி உள்ளார்கள். அதிக பக்கங்கள் படித்தால் தான் அறிவு என்று எண்ணுவது தவறு. இப்போதைக்கு அவன் நன்றாக விளையாடி, மகிழ்ச்சியாகப் படித்தாலே போதுமானது.

2. இந்தியைத் தனியாகக் கூடப் படித்துக் கொள்ளலாம். பள்ளியில் தான் படிக்க வேண்டும் என்றில்லை. (இந்தி தேவையே இல்லை என்று கூட விளக்கலாம். ஆனால், புரிந்து கொள்ளும் மக்கள் குறைவு)

3. பள்ளியில் போதிய கவனம் செலுத்தவில்லை, நட்புகள் சரியில்லை என்றால் வேறு பள்ளி மாற்றலாம். அது கூட சமச்சீர் கல்வியையே நன்றாகப் பயிற்றுவித்து நல்ல பழக்கங்களை உருவாக்குகிற பள்ளிக்கு மாற்றலாம். இதற்காகப் பாடத்திட்டத்தை மாற்ற வேண்டாம்.

4. பள்ளிக்கூடம் மாறி, ஊர் மாறி எத்தனையோ புதிய நட்புகளைப் பெறுவதும் இருக்கிற நட்புகளைத் தொலைப்பதும் வாழ்க்கையின் போக்கு. இதற்கு எல்லாம் கவலைப்படக்கூடாது :)

கடைசியில் CBSE முறையில் இப்போது உள்ளதை விட மூன்று மடங்கு கூடுதல் கட்டணம் கேட்கிறார்கள் என்பதால் சமச்சீர் கல்வியிலேயே தொடர முடிவு ! :)