மாணவர்களுக்கு சமூக அக்கறைப் பயிற்சி

http://domesticatedonion.net/tamil/2009/07/04/பள்ளிக்-குழந்தைகள்-வேலை

இடுகையை முன்வைத்து:

அரசு பள்ளி மாணவர்களை கழிவறை கழுவுதல் உள்ளிட்ட பணிகளில் “கட்டாயமாக” ஈடுபடுத்துவது அவர்களுக்கு சமூக அக்கறை சொல்லித் தருவதற்காக அல்ல.
அரசு நிதி ஒதுக்காததால் மாணவர்களைக் கொண்டு அவர்கள் விருப்பத்துக்கு மாறாக இலவச வேலை வாங்கிக் கொள்கிறார்கள். இதுவும் குழந்தைத் தொழிலாளர் முறை போலத் தான். இதை நியாயப்படுத்துவது தவறு.
மாணவர்களுக்கு வழிகாட்டியாக என்றாவது ஆசிரியர்களும் சேர்ந்து இந்தப் பணிகளில் ஈடுபடுகிறார்களா? தங்கள் கழிவறையைத் தாங்களாவது கழுவிக் கொள்கிறார்களா? மாணவன் கழிவறை வசதி இன்றி பொட்டலில் கழிக்க, ஆசிரியர்கள் தங்கள் கழிவறையைக் கூட மாணவர்களை விட்டுக் கழுவச் சொல்வதற்கு பேர் சமூகப் பயிற்சியா? நான் படித்த பள்ளியிலேயே ஆசிரியருக்கு தேநீர், cigarette, பாக்கு வாங்கி வர பாட நேரத்தில் அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறோம். இது இன்றும் பல பள்ளிகளில் தொடர்கிறது. இது ஆசிரியர்களின் எல்லா பணிவிடைகளையும் செய்து தரும் குருகுல முறை தான். இதன் தொடர்ச்சி தான் சில முனைவர் பட்ட ஆய்வு மாணவர்களைக் கூட அவர்களின் ஆய்வு வழிகாட்டிப் “பேராசிரியர்கள்” காய்கறி வாங்கவும், மின்சாரக் கட்டணம் கட்ட அனுப்புவதுமாகத் தொடர்கிறது.
காசு வாங்கிக் கொண்டு கல்வி விற்கும் தமிழ்நாட்டுத் தனியார் பள்ளியில் இது போல் தினம் கழிவறை கழுவ விட்டால் பெற்றோர்கள் ஒப்புக் கொள்வார்களா? காசில்லாத ஏழை அரசு பள்ளி மாணவனுக்கு மட்டும் இது எப்படி சமூகப் பயிற்சி ஆகும்?
மாணவர்களுக்கு சமூக அக்கறை சொல்லித் தர சாரணர் படை, தேசிய மாணவர் படை, செஞ்சிலுவைச் சங்கம், NSS போன்ற அமைப்புகள் உள்ளன. அதன் மூலம் பக்கத்து ஊர்களில் பள்ளியில் சிறு சிறு பணிகளில் ஈடுபடுத்தலாம்.

எந்த வேலையும் இழிவல்ல. கழிவறை கழுவதலையும் கூட மாணவர்களின் கோடை முகாம்களில் ஒரு பயிற்சியாகத் தரலாம். இதன் மூலம் உடலுழைப்புத் தொழிலின் சிரமத்தை, மதிப்பை மாணவர்கள் உணர்வார்கள். ஆனால், அந்தந்த வேலைக்கு ஆள் போடாமல் குழந்தைகளை இவற்றில் தினம் தினம் ஈடுபடுத்துவது தவறு.